“ஈகோவும் பொறாமையும்தான் காரணம்” – கௌதம் மேனன் பதிலடி

தற்போது என் மீது தொடுக்கப்பட்டு வரும் வழக்குகள் எல்லாமே என் மீது கொண்ட பொறாமையினாலும் தங்களது ஈகோவை திருப்திப்படுத்திக் கொள்வதற்காகவும் போடப்பட்டவை என்று கூறியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

2010-ல் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இந்தி ரீமேக்கை ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் இயக்கினார் கௌதம். இந்தப்படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான ஆர்.ஜெயராமன் என்பவர், கௌதம் மேனனின் சொந்த நிறுவனமான போட்டான் கதாஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையை தன்னிடம் ஏமாற்றி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதுபற்றி கௌதம் மேனன் குறிப்பிடும்போது, “சரியாக நான் சூர்யாவை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் என் மீது முதல் வழக்கை தொடுத்தார்கள். அதற்கடுத்து சிம்பு, அஜித் இருவரின் படங்களையும் நான் இயக்கப்போவதாக அறிவித்ததும் இப்போதும் ஒரு வழக்கை தொடுத்துள்ளனர். ஆனால் தக்க ஆதாரங்களுடன் இந்த வழக்கை நான் சந்திப்பேன்.

இந்த பிரச்சனையில் எனக்கு ஆதரவாக இருக்கும் நல்ல உள்ளங்களான சரத்குமாரும் ஹாரிஸ் ஜெயராஜும் என் தரப்பு நியாயத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார். எப்படியோ கௌதமுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவோம்.

Gautham Menon
Comments (0)
Add Comment