என்கவுன்டர் சரியா தப்பா என்பதையும் தாண்டி, என்கவுன்டர் நடப்பதற்கான சுயநல அரசியல் அதிகார வர்க்கத்தின் உண்மையான முகத்தை தோலுரித்து கட்ட முயன்றிருக்கிறார்கள்.
இளம் வயதிலேயே என்கவுன்டர் போலீஸ் அதிகாரியான சக்திவேல் வாசு, மேலதிகாரியின் உத்தரவுப்படி என்கவுன்டர்களை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் மனித உரிமை கழக அதிகாரி சமுத்திரக்கனி மூலம் இதன் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து அப்ரூவர் ஆக முயற்சிக்கிறார்.. அதுவரை நட்பாக இருந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சக்தியையே என்கவுன்டர் என்கிற பெயரால் அழிக்க துணிகின்றனர்.. நடந்தது என்ன என்பது க்ளைமாக்ஸ்.
துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு சக்திவேல் வாசு சரியாக பொருந்தினாலும், இவ்வளவு இளம் வயதில் என்கவுன்டர் போலீஸ் ஆகும் அளவுக்கு அந்த கேரக்டருக்கு தகுதி இருக்கிறதா என்கிற சந்தேகமும், என்கவுன்டர்களுக்காக போடும் படா படா ஸ்கெட்ச்களும் சந்தேகத்தை தருகின்றன.. சமுத்திரக்கனியின் மிடுக்கான அதிகாரி வேடமும் கிடுக்கிப்பிடி விசாரணையும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
பரபரப்பாக கதையை நகர்த்தவேண்டும் என்பதற்காக வெவ்வேறு கதாபாத்திரங்களை ஒரே புள்ளியில் இணைக்கிறேன் என்று காட்சிகளின் நேரங்களை மாற்றி மாற்றி போட்டு, படம் காட்டியிருப்பது தலைசுற்ற வைக்கிறது. என்கவுன்டரில் அப்பாவிகள் உயிர்கள் பலியாகின்றன என்பதை சொல்வதற்காக இரண்டு இளம் ஜோடிகளின் கிளைக்கதைகள் திணிக்கப்பட்டுள்ளதும் அலுப்பை தருகின்றன. ரியலிஸ்ட்டிக்காக முடிக்கிறோம் என எதார்த்தம் மீறிய க்ளைமாக்ஸை ஏற்கமுடியவில்லை.. இயக்குனர் ஆர்.பி.ரவி என்கவுன்டர் ஏரியாவுக்குள் மட்டும் திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.