’தலைநகரம் 2’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பு! – மகிழ்ச்சியில் படக்குழு

ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் இயக்குநர் வி.இசட்.துரை தயாரிப்பில், சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘தலைநகரம் 2’ ரசிகர்களின் அமோக வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் சுந்தர்.சி, “வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி தலைநகரம் 2 திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் மூவி. ஒவ்வொரு ஆக்கனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும். நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள். இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் உங்களுக்கும் என் நன்றிகள்.” என்றார்.

நடிகை ஆயிரா பேசுகையில், “இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V Z துரை சாருக்கு நன்றி. நான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா என பயந்தேன், ஆனால் துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர் சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் VZ துரை பேசுகையில், “தலைநகரம் 2 எடுக்க ஆரம்பித்ததிலிருந்தே தலைநகரம் 1 பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அது மிகப்பெரிய வெற்றிப்படம். வடிவேலு சார் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. என் படத்தில் காமெடியே இல்லை ஏன் இந்தப்படம் எடுத்தேன் என்றால், இந்தக்கதை ஒரு எக்ஸ் ரௌடி பற்றியது. அதற்கு ஏற்கனவே ரௌடியாக நடித்து ஃபேமஸான ஒருத்தர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுந்தர் சார் ஏற்கனவே தலைநகரம் பண்ணியிருந்ததால் அவரை வைத்து கதை செய்யலாம் என அவரிடம் கேட்டேன், எந்த தயக்கமும் இல்லாமல் உடனே செய்யுங்கள் என்றார். எங்களுக்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் டைட்டில் தந்தார். இப்போது படம் பார்த்த மக்கள் தலைநகரம் முதல் பாகத்தை விட நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்தப்படத்திற்கு காமெடி தேவையில்லை என்று அவர்களே சொல்வது மகிழ்ச்சி. இந்தப்படத்திற்கு 300 தியேட்டர்களா ? வேண்டாம் என்றேன் அவர்களே கேட்கிறார்கள் என்றார்கள் இப்போது 350 தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது . நிறைய தியேட்டரில் படத்தைக் கேட்டு வாங்கி ஓட்டுகிறார்கள். மகிழ்ச்சி. முக்கியமாக இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு நன்றிகள். உங்கள் விமர்சனம் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு நன்றி. இணை தயாரிப்பாளர் நண்பன் மது என்னோட எல்லா துக்கத்தையும் அவனிடம் தான் பகிர்ந்து கொள்வேன் அவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இணை தயாரிப்பாளர் மதுராஜ் பேசுகையில், “நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப்படத்திற்காக 2,3 வருடம் உழைத்துள்ளோம். பிரபாகரன், விவேகானந்தன் சார், ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் உடனிருந்தார்கள். இந்தப்படம் பல தடைகளைத் தாண்டித் தான் வந்தது. ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள் ஆனால் இப்போது படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம். ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

actor and director sundar cactress ayiradirector vz duraiPalak Lalwanithalainagaram 2 success meetthalainagaram 2 thanks giving meet