இதுவரை போலீஸ் படங்கள் என்றால் போலீசுக்கும் ரவுடிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் அல்லது இன்டர்நேஷனல் கிரிமினலுக்கும் நடக்கும் யுத்தம் தான் கதைக்களமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.. ஆனால் சக்திவேல் வாசு (பி.வாசுவின் மகன் சக்தி தான்) நடித்துவரும் ‘தற்காப்பு’ படம் புது மாதிரியான போலீஸ் படம் என்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.பி.ரவி.
அப்படி என்ன புதுசு என்கிறீர்களா..? “இந்தப் படத்தில் அரசியல் உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள். இல்லை. ஏன் கரை வேட்டிய ஒருவர் கூட படத்தில் வரமாட்டார்கள். ஆனாலும் அரசியல் உள்ளது” என பொடி வைக்கிறார். இயக்குநர் ஆர்.பி.ரவி. அப்புறம் யாருடன் மோதப்போகிறதாம் போலீஸ் என்றுதானே கேட்கிறீர்கள்..?
போலீசுக்கும் போலீசுக்கும் மோதல், என்கிற புதிய கதைக்களத்தில் காக்கிச் சட்டை அணிந்து பணியாற்றும் முன் போலீசுக்குள்ள கடமை பொறுப்புகளைப் பேசுகிற படம் தான் ‘தற்காப்பு’. இன்றைக்கு ஒரு போலீசால் நியாயமாக நேர்மையாக இருக்க முடியாத சூழல் இருக்கிறது. ஏன் போலீஸ் நல்லவனாக இருக்க முடியவில்லை? அவர்கள் இருப்பதில்லையா? இல்லை அவர்களை இருக்க விடுவதில்லையா? காரணம் அமைப்பா, சமூகமா, மக்களா? எனஎல்லாவற்றையும் அலசுகிறதாம் இந்தப்படம்.