மும்பையை கதைக்களமாக கொண்டு படங்களை உருவாக்குவதில் நமது இயக்குனர்கள் சிலருக்கு அலாதி பிரியம் என்றால், மும்பை கதைக்களங்களில் நடிக்க நம் ஹீரோக்களும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள்.. அந்தவகையில் ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் ‘24’ என்கிற படமும் மும்பை ஏரியாவில் தான் சுழல இருக்கிறது.
சயன்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏப்ரலில் மும்பையில் துவங்கி, அங்குள்ள பிரமாண்ட ஸ்டுடியோ ஒன்றிலும் மற்றும் மும்பையின் சில லோக்கல் ஏரியாக்களிலும் படமாக்கப்பட இருக்கிறது.
தெலுங்கில் ‘மனம்’ படைத்த விக்ரம் கே.குமார் இயக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தையடுத்து இரண்டாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவாளராக வினோத்குமாரும் ஆர்ட் டைரக்டராக ராஜீவனும் பணியாற்ற இருக்கிறார்கள்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயிண்மென்ட்’ நிறுவனமே தயாரிக்கிறது. தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்துவரும் சூர்யா அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.