ஆரம்ப காலங்களில் ரஜினி படங்களை பார்த்து ரசிகர் ஆனவர்களில் பலரும் அவரது சண்டைக்காட்சிகளை பார்த்து ரசித்த ஆட்கள் தான். அவர் மட்டுமல்ல, அனைத்து முன்னணி நடிகர்களின் இமேஜும் ரசிகர்களிடம் கட்டமைக்கப்பட்டதில் முக்கிய பங்கு இந்த சண்டைக்காட்சிகளுக்குத்தான். அப்படிப்பட்ட சண்டைக்கலைஞர்கள் உருவாக்கிய தென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா 26ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது..
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், “நான் சின்ன வயதில் படம் பார்க்கும் போது படத்தில் எத்தனை பைட் இருக்கு எத்தனை ரீல் படம் என்று தான் பார்ப்பேன்.. ஒரு படத்துக்கு தயாரிப்பாளர் இயக்குனர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானவர்கள் சண்டைக்கலைஞர்கள்..
எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின் போது கொண்டாடுவது எவ்வளவு பொருத்தம்… எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள் பல பேருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார். சினிமாவில் எல்லோரும் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள் ..ஆனால் இவர்கள் வியர்வையுடன் ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள்.
உயிரை பணயம் வைக்கிறார்கள். உலகம் முழுவதும் ஆக்ஷன் படத்துக்கு பெரிய வரவேற்பும் வசூலும் இருக்கு.. நீங்கள் சண்டைகாட்சி படப்பிடிப்பின் போது காட்டும் அக்கறையை உங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் படிக்க வைப்பதிலும் காட்டுங்கள். உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் வந்து கேளுங்கள். என் வீட்டு கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும்” என்று நெகிழ்சியுடன் கூறினார்.