சில சமயங்களில் சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் தமது நடிப்பால் நம் கவனத்தை ஈர்த்துவிடுவார்கள் ஒருசிலர். ‘போராளி’ திலீபனும் அப்படிப்பட்ட ஒருவர் தான். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “நிமிர்ந்துநில்” படத்தில் லஞ்சம் வாங்குவதையே தொழிலாக கொண்டு பின்பு திருந்தி கதாநாயகன் ஜெயம்ரவிக்கு உதவி செய்யும் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கைதட்டல்களையும் பெற்றாரே அவரேதான் இவர்.
கோவையில் டிப்ளமோ படித்து விட்டு சென்னைக்கு வந்து இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக சேர்ந்து வானத்தைப்போல, உன்னை நினைத்து போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தா திலீபன், பிறகு கஸ்தூரி ராஜா, கே.பாலச்சந்தர், சமுத்திரகனி, சுசீந்திரன் ஆகியோரின் படங்களிலும் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார்..
அந்த அனுபவத்தில் தற்போது ‘வெள்ளை குதிரையில் ராஜகுமாரன்’ என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் திலீபன் மருந்துக்குக் கூட மேக்கப் போடவில்லை. டைரக்ஷன் மட்டுமே.
“போராளி படத்தில் சமுத்திரகனி சார் என்னை குடிகார குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிகராக்கினார். இன்று ‘நிமிர்ந்து நில்’ மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கிறேன். முழுக்க முழுக்க நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை நல்ல நடிகனாக்கிப் பார்த்த என் குருநாதர் சமுத்திரகனி அவர்களுக்கு என் ஆயுள் முழுக்க நன்றிக் கடன் பற்றிருக்கிறேன்” என்கிறார் போராளி திலீபன்.