சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சீமத்துரை’ இப்படத்தில் கதாநாயகனாக கீதன், கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேலா ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தாவர்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவராகிய நடிகை விஜி சந்திரசேகரும் வந்திருந்து விழாவை சிறப்பாக்கினார்.
இயக்குநர் மிஷ்கின், பேசும்போது, “விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். இயக்குநர் சந்தோஷ் தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் ‘சித்திரம் பேசுதடி’ படம் வந்தபோது இதை செய்தேன். இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.” என்று பேசி முடித்தார்.
விஜி சந்திரசேகர் பேசும்போது, “இந்தப்படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்ததது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன். இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன்” என்று சுருக்கமாக பேசினார்.
எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, “பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று பேசினார்.