தற்போது இந்த ‘ரவுடி கோட்டை”படத்தை தமிழில் திரையிட அனுமதிக்க கூடாது என்று ஹன்சிகா மோத்வானி, நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இந்தப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து தயாரித்துள்ள எஸ்.சுந்தரலட்சுமி, தற்போது அனைத்து வேலைகளும் முடிந்து, படத்தை திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் வெளியானது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபற்றி எஸ்.சுந்தரலட்சுமி கூறும்போது, “ நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால், தெலுங்கு பட அதிபர் மீது தான் தொடரவேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது” என்று கூறியுள்ளார்.
மேலும் ஹன்சிகா நடிகர் சங்கத்தில் தங்கள் மீது எடுத்த நடவடிக்கையை விலக்கி கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் எஸ். சுந்தரலட்சுமி.
‘ரவுடி கோட்டை’ படத்தில் “இச் இச் இச் ”என்ற ஒரு பாடல் காட்சியில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் ஹன்சிகா. தமிழில் இப்போதுதான் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் ஹன்சிகா, படம் வெளியானால் தனது இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்ற பயத்தில்தான் தடை கேட்டிருப்பார் என்று தகவல்கள் உலாவருகின்றன.