ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது. ரஜினி ரசிகர் மன்ற தலைவர்களில் ஒருவரான சோளிங்கர் ரவி மற்றும் முருகன் இந்த ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்திருந்தனர்.
பகல் முழுதும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மாலையில் விழாவில் சங்கமித்துக் கூடினர். அரசியல் கட்சி மாநாடு போல பிரமாண்ட கட்அவுட், மாபெரும் மேடை, பேனர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என சோளிங்கரே குலுங்கியது.
மாலையில் விழா தொடங்கியதும் விழாமேடையில் குத்து விளக்கேற்றப்பட்டது. ரஜினி மன்றத்தின் கொடியேற்றப் பட்டது. விழா மேடையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் திருவுருவப் படம் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும் ‘கபாலி’ தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு ஆகியோரால் திறந்து வைக்கப் பட்டது.
விழாவில் இயக்குனர் லிங்குசாமி, கருணாஸ், பாபி சிம்ஹா, கருணாகரன், லொள்ளுசபா ஜீவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பிரவாகமாக பேசினார்கள். விழாவில் நலிவடைந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு 15லட்ச ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள்,இஸ்திரிப்பெட்டிகள்,3 சக்கர சைக்கிள்கள் பண உதவி என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக யூகே.முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்றது.இவ் விழாவை’ விஜய் டிவி’ தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் மற்றும் பண்பலை ஆர்.ஜே. ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.