பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் அதற்கான பட்டியலில் ரஜினியும் ஆன்மீக சுற்றுப்பயணமும் என்கிற வார்த்தையை முதல் பதிலாக சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு தனது ஆன்மீக தேடலுக்காக அடிக்கடி ரஜினி பல புண்ணிய தளங்களுக்கு சென்று வழிபாட்டு வருவது வாடிக்கையான ஒன்று.
அந்தவகையில் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல புண்ணிய திருத்தலமான மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர், அங்குள்ள துங்கபத்ரா நதியில் புனித நீராடினார். அதன்பின்னர் ரஜினிகாந்த் அங்குள்ள கிராம தேவதையான மஞ்சாலம்மா கோயிலுக்குச் சென்று அங்கேயும் தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர், ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர் மந்திராலயம் வருவதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. திடீரென அங்கு ரஜினிகாந்த் வந்ததை முதலில் அறியாத அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்,ரஜினிகாந்தைப் பார்த்த பின்னர் அவருடன் சேர்ந்து செல்போன்களில் படம் எடுத்துக்கொள்ளவும், கை குலுக்கவும் அலைமோதினர். இவர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர்.