எல்லோருக்கும் அவரவர் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பார்ப்பதை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன? அதிலும் பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் பிடித்தமான பொழுதுபோக்கு.
அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது, அதன் பாதிப்புகள், விளைவுகள், போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம் தான் ‘பூவரசம்பீப்பி’
இந்தப்படத்தை இயக்கியுள்ள ஹலிதா சமீமின் சொந்த ஊர் தாராபுரம். தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள மற்றுமொரு பெண் இயக்குனர். இயக்குனர் மிஸ்கின், சமுத்திரகனி, புஷ்கர்-காயத்ரி ஆகியோரிடம் பணியாற்றியவர்.
ஆனால் அவர்களின் சாயலோ பாதிப்போ இந்தப்படத்தில் தெரியாது என்கிறார் ஹலிதா ஷமீம். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா இந்தப்படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களுள் ஒருவரும் கூட.. வரும் மே-30ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது.