தமிழர்களுக்கான அடையாளங்களுள் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலும் ஒன்று. கிட்டத்தட்ட 2500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய இந்த நாவலை நான்கு, ஐந்து முறை வாசித்தவர்கள் எண்ணிக்கையே லட்சங்களை தாண்டும்.
பல வருடங்களுக்கு முன்பே இந்த நாவலை படமாக்க புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் முயன்றார்… அது சில காரணங்களால் கைகூடாமல் போனது. அதன்பின் இயக்குனர் மணிரத்னமே முயற்சி எடுத்து, பின்னர் சில காரணங்களால் அதை ஒத்தி வைத்துவிட்டார்.
இப்போது இந்த நாவலை இரண்டரை மணி நேரம் ஓடும் 2டி அனிமேஷன் படமாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் வளமான தமிழகம் அமைப்பை சேர்ந்த சரவண ராஜாவும் அனிமேஷன் இயக்குனரான கார்த்திகேயனும்..
சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவரும் இந்த அனிமேஷன் படத்தை வரும் 2017 ஜனவரியில் வெளியிடும் வகையில் இரண்டு வருட தயாரிப்பாக உருவாக்குகிறார்கள். ஏற்கனவே பல ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கு பணிபுரிந்த தனது 20 வருட அனுபவத்தை வைத்து இதை உருவாக்கி வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் என்கிற காவியத்தை படமாக எடுக்கிறோம் என்கிற பெயரில் அதை பாழாக்கி விடவில்லை என்பதை அந்த காவியத்தின் ரசிகர்களுக்கு அறிவிக்கும் விதமாக தாங்கள் இதுவரை மேற்கொண்டுள்ள பணியை ட்ரெய்லராக்கி வெளியிட்டுள்ளனர்..
இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.பி,ஜனநாதன், கார்ட்டூனிஸ்ட் மதன், கல்யானமாலை மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பார்ப்பதற்கு பிரமிப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தவே செய்கிறது ட்ரெய்லர். மெயின் பிக்சருக்காக வி ஆர் வெயிட்டிங்.