ஆகஸ்ட்-15ஆம் தேதி பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டை நடத்திய பார்த்திபன் திருட்டு டிவிடிக்கு எதிராக தானே போலீசாரின் உதவியுடன் களத்தில் இறங்கப்போவதாக சொன்னார்.
சொன்னபடியே பர்மா பஜாரில் வெள்ளிகிழமை காலை அதிரடி ரெய்டு நடத்தி சில கடைகளில் இருந்து அவரது படத்தின் திருட்டு டிவிடிகளை கைப்பற்றினார். இந்தப்படத்தின் திருட்டு டிவிடி எங்கே இருந்து தயாரிக்கப்படுகிறது, அதாவது தயாரிப்பவர்களுக்கு இந்தப்படத்தை காப்பி பண்ண துணை நிற்கும் தியேட்டர் எது என கண்டுபிடிக்க, ‘க்யூப்’ பார்மேட்டில் திரைப்படங்களை தியேட்டர்களில் ஒளிபரப்பும் நிறுவனத்தின் உதவியை நாடினார் பார்த்திபன்.
அவர்கள் அந்த டிவிடியை பரிசோதனை செய்து பார்த்ததில் கோவை மாவட்டத்தில் இருக்கும் அன்னூர் சென்ட்ரல் தியேட்டரில் இருந்து தான் திருட்டு டிவிடிக்காக படம் களவாடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கடந்த 17ஆம் தேதி 3மணி காட்சியில் தான் இது காப்பி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதை பத்திரிகையாளர்களிடம் தெரியப்படுத்திய பார்த்திபன் அந்த தியேட்டருக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் தொடர்ந்து போலீசுடன் இணைந்து இந்த திருட்டு டிவிடி சோதனையில் உதவி செய்யப்போவதாகவும் கூறினார்.
கடந்த மாதம் இப்படித்தான் தேனி மாவட்டத்தில் உள்ள சுந்தரம் தியேட்டரில் திரையிடப்பட்ட ‘அதிதி’ படத்தின் டிவிடியை திருட்டுத்தனமாக காப்பி பண்ண அந்த தியேட்டர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..