அந்த கணீரென்ற வெண்கலக்குரலை கேட்கும்போதே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட முடியும், அவர் நடிகை சுகுமாரிதான் என்று. நடிகை பானுமதியை போலவே அவ்வளவு தனித்துவம் வாய்ந்த குரல், அடுத்ததாக சுகுமாரிக்கு மட்டுமே அமைந்திருந்தது..
அற்புதமான நடிகையான சுகுமாரி இன்று நம்முடன் இல்லை என்பது நம் கண்களில் அறையும் உண்மை.
விளையாட்டுப்போல ஒருவருடம் ஓடிவிட்டது. 74 வயதான சுகுமாரி கடந்த வருடம் வீட்டில் குத்துவிளக்கேற்றியபோது அவரது சேலையில் பற்றிய தீ அந்த பொன்னுடலை ரணமாக்கி மருத்துவமனைக்கும் பின்னர் மயானத்திற்கும் அனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தது.
புகழ்பெற்ற திருவிதாங்கூர் நடன சகோதரிகளான நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரின் சொந்த தாய்மாமன் மகள்தான் சுகுமாரி. பத்து வயதில் நடிக்கவந்த சுகுமாரி தனது பத்தொன்பதாவது வயதில் இயக்குனர் பீம்சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சுகுமாரியின் முப்பதாவது வயதில் பீம்சிங் மரணம் அடைந்து விட்டார்.
அவரது மரணத்துக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை சுகுமாரி தவிர்த்து வந்தாலும் திரையுலகம் அவரை விடுவதாக இல்லை. அதன்பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கிய சுகுமாரி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, பிரேம் நசீர், ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, விஜய், அஜீத், தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
60 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட படங்களில் சுகுமாரி சாதனை படைத்துள்ளார். அனைத்து மொழிகளிலும் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார் என்பது ஆச்சர்யமான ஒன்று..
பழைய படங்களி ரசிகர்களுக்கும் ஏன், குறிப்பாக இன்றைய தலைமுறை ரசிகர்களின் மனதில் கூட ‘யாராடி நீ மோனி’ படத்தில் பிரம்பை வைத்துக்கொண்டு தனுஷை விரட்டும் ‘நம்ம வீட்டு பாட்டி’யாக சுகுமாரி என்றுமே நினைவில் நிற்பார்.