நெல் விவசாயத்தில் லாபம் பெற இயற்கை விவசாயத்தை நாடினால் மட்டுமே முடியும் என தொடர்ந்து முழங்கி வந்த நெல் ஜெயராமன் இப்போது நம்மிடம் இல்லை. புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் மருத்துவமனையிலே பிரிந்தது.
அவரது மறைவுக்கு கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயன், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நெல் ஜெயராமன், சிறுவயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து விவசாயிகளிட வழங்குமாறும், இயற்கை விவசாயத்தை பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு எடுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அன்று முதல் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்கும் பயணத்தை ஜெயராமன் தொடங்கினார். இந்த பயணத்தில் அயராது உழைத்தும் தேடியும் கிட்டத்தட்ட 174 பாரம்பரிய நெல் விதைகளை அவர் மீட்டெடுத்தார். இதனால் அவரை பலரும் நெல் ஜெயராமன் என்று குறிப்பிட்டு அழைத்தனர்.