ஜல்லிக்கட்டு போராட்டம் போல தற்போது ஹைட்ரோகார்பன் விவகாரம் பூதாகரமாகி வருகிறது.. விவசாய நிலங்களை அழித்து உருவாக இருக்கும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வலுவாக எழுந்துள்ளது.. சொல்லப்போனால் மீத்தேன்’ என்கிற திட்டம் தான் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டமாக மறுவடிவமெடுத்து மக்களை குறிப்பாக விவசாயிகளை மிரட்டி வருகிறது..
பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த விவகாரத்தில்மக்கள் பக்கம் ஆதரவாக நிற்க முடிவெடுத்துள்ளது. இதுபற்றி தெளிவான அறிக்கை ஒன்றும் இன்று நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;
“நாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும்.
களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.