அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. கதாநாயகியாக மலையாள திரையுலகை சேர்ந்த தீப்தி சதி நடித்துள்ளார். வெர்ஜின் பசங்க என்கிற வெப் சீரிஸை இயக்கிய ஆர்.கோபி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வரும் பிப்-12ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் கதிர் பேசும்போது, “இந்தப்படத்தில் எனக்கு காமெடிக்கு நிறைய ஸ்பேஸ் விட்டுக்கொடுத்தார் ஹீரோ தினேஷ்.. இயக்குநர் கோபி முதலில் என்னை ஒப்பந்தம் செய்யும்போதே, நீ சிங்கிளா என்று கேட்டார். ஆமா என்று சொன்னதும் கையெழுத்து போடுங்க என்றார். ஆனால் எங்களை எல்லாம் சிங்கிளா என்று கேட்ட இயக்குநர் போன வருடம் டபுள்ஸ் ஆக மாறி இதோ விரைவில் குழந்தையும் பிறக்க இருக்கிறது” என ஒரு புதிய தகவலை கூறினார்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹெட் தமிழ்தாசன் பேசும்போது, “இந்த விழாவிற்கு கோபிக்காக தான் வந்தேன். கோபி ரொம்ப ஷார்ப்பான பையன். என்னை குரு என்றார். ஆனால் குருவிற்கு முன் படம் பண்ணிட்டார். எதையும் வேகமா பிக்கப் பண்ணிப்பார். இன்று சின்னத்திரையில் இருந்து படம் பண்ண வருவது என்பது ரொம்ப கஷ்டம். அதை கோபி சாதித்துள்ளார்” என பாராட்டினார்.
பரபரப்பான பேச்சுக்கு பெயர்பெற்றவரான நடிகர் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “,இந்தப்படத்தின் டீசர் மூலமாக இயக்குநர் கோபிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரிகிறது. முயற்சியும் உழைப்பும் இருந்தால் சரியான வாய்ப்பு வந்தே தீரும். இயக்குனர் தம்பி கோபி இளைஞர்களை ஈர்க்கும் விதமாக படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயித்த பின்பும் அவர் தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்.
விஜய் படத்திற்கு 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் ஏனோ திடீரென்று மறுத்து விட்டார்கள். இப்போது அந்தப்படம் ஓடி, ஓடிடிக்கு வந்த பிறகு 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அதில் என்ன அரசியலோ தெரியல. நமக்கு அது தேவையில்லை. அரசு கொரோனா விஷயத்தில் நன்றாக நடந்து கொண்டது. அதேபோல் 8% வரியை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.
படத்தின் இயக்குநர் ஆர்.கோபி பேசும்போது, “”எனக்கு குரு என்றால் ஜீ தமிழ் தமிழ்தாசன் சார் சின்னத்திரையில் இருந்தபோது எனக்கு நிறைய கத்துத் தந்தது அவர் தான். எனது வெப்சீரிசைப் பார்த்துவிட்டு தான் இந்த வாய்ப்பு வந்தது. நானும் சிங்கிள் தான் என்னோட கதை, உங்களோட கதை, நம்மளோட கதை. 30 வயசுல கல்யாணம் பண்ணலன்னா உனக்கு படம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. படம் கமிட் ஆனதும் எனக்கு கல்யாணம் நடந்தது. அதனால் சிங்கிள்ஸ் இப்படத்தைப் பாருங்க கல்யாணம் நடக்கும்” என கூறினார்..