ஓரளவுக்கு வளர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்த இளம் ஹீரோக்களின் கனவு கச்சிதமான ஒரு போலீஸ் கதையில் ஒரு மிடுக்கான கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான். இதற்கு வயதும் உடலும் ஒத்துழைக்கவேண்டும். கூடுதலாக நடிப்பில் ஓரளவு பக்குவமும் ஏற்பட வேண்டும்.
விக்ரம் பிரபுவுக்கு அந்த பக்குவம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆம் கௌரவ் இயக்கியுள்ள ‘சிகரம் தொடு’ படத்தில் போலீஸ் அதிகாரி முரளி பாண்டியனாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.. ட்ரெய்லரை பார்க்கும்போதே போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார்.
படத்திலும் அதற்கு குறைவில்லாத நடிப்பை வழங்கியிருப்பதாக அவரது தந்தையாக நடித்துள்ள சத்யராஜ், இன்று நடைபெற்ற ‘சிகரம் தொடு’ ஆடியோ விழாவில் குறிப்பிட்டார். மேலும் கும்கி இசைவிழாவில் விக்ரம்பிரபுவை “இது உனக்கு ஒரு ‘பராசக்தி’” என வாழ்த்தியவர் அதை இப்போது குறிப்பிட்டு அவரது போலீஸ் கதாபாத்திரத்தை பாராட்டும் விதமாக “இது உனக்கு ஒரு தங்கப்பதக்கம்” என்று அவரது தாத்தாவுடன் இணைத்து பாராட்டினார்.
இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவின் கேரக்டர் பெயர் முரளி பாண்டியன். போலீஸ் கேரக்டர்கள் என்றதுமே இதற்குமுன் ரஜினி நடித்த அலெக்ஸ்பாண்டியன், கார்த்தி நடித்த ரத்தினவேல் பாண்டியன் ஆகியவை தான் இந்த பாண்டியன் வரிசையில் நம் ஞாபகத்துக்கு வருபவை. அந்த வரிசையில் இடம்பிடிப்பாரா இந்த முரளி பாண்டியன்..?