நடிகர் சிவகுமாரை பொறுத்தவரை கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்ததால் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக படிக்க வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலமாக கல்வி கற்க வழி செய்து வருகிறார். அப்படிப்பட்ட சிவகுமாரை நீட் தேர்வு பாதிப்பினால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணம் ரொம்பவே பாதித்துள்ளது..
இந்தநிலை நீடித்தால் மாநில அரசு கல்வி திட்டத்தில் படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவப்படிப்பு வெறும் கனவு தானா என தனது மனக்குமுறலை கொட்டியுள்ளார் சிவகுமார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் –
ஒரு டாக்டர் மகள் –
ஒரு பேராசிரியர் மகள் அதிக
மதிப்பெண்கள் எடுப்பதில்
எந்த அதிசயமும் இல்லை.
மூட்டை தூக்கும் தொழிலாளி
மகள் 1176 – மதிப்பெண்கள்
எடுப்பது இமாலய சாதனை. பத்தாயிரத்தில் ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும்..
குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது.
உண்ண நல்ல உணவு கிடையாது
உடுத்த கௌரமான உடை கிடையாது. படுக்க நல்ல பாய்
கிடையாது.
காடா விளக்கில் படித்து
விடியும் முன்பும், இருட்டிய பின்பும்
மட்டும், இயற்கை உபாதையை கழிக்க செடி கொடி மறைவில் ஒதுங்கி வாழும், அனிதா போன்ற
பல்லாயிரக்கணக்கான குழந்தைகள்
பெரும் படிப்பு படிக்கக் கூடாதா ?
டாக்டர், எஞ்சினியர், ஐ.ஏ.எஸ்.
கனவு காணக்கூடாதா ?
ஏழைகள் எத்தனை தலைமுறை
ஆனாலும் ஏழைகளாகவே
வெந்து நொந்து சாக வேண்டும்
என்று இந்த அரசு நினைக்கிறதா ?
மாநில அரசின் கல்வித்திட்டத்தில்
படிப்பவர்களை ஒட்டு மொத்தமாக
அழிக்கவே இந்த நீட் தேர்வு.
சென்னையில் தனியார் பள்ளியில்
லட்சங்கள் கல்விக்கட்டணமாகக் கட்டி படிக்கும் மாணவன் திறமையும்
எட்டாம் வகுப்பு வரை தேர்வு என்றால்
என்னவென்றே தெரியாமல் பின்
11-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன் திறமையும் ஒன்றாக இருக்குமா ?
ஒரே நாடு சரி. ஒரே மொழி, ஒரே மதம் இந்தியாவில் சாத்தியமா ?
நாடு முழுவதிலும் பல்வேறு தரத்தில்
படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தயார் செய்யும் வரை
நீட் தேர்வு இப்படி அப்பாவி அனிதாக்களை காவு வாங்குவதை
நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா ?
இவ்வாறு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் சிவகுமார்.