மறைந்த தமிழக முதல்வரின் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் நடிகை கௌதமி இதுகுறித்து சந்தேகம் எழுப்பி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.. இப்போது நடிகர் மன்சூர் அலிகான் முதல்வரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் நீதிமன்றம் தாமாகவே வந்து இதை விசாரிக்கவேண்டும் என கூறியுள்ளார்..
இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் பேசும்போது, “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. 21ம் தேதி நல்ல உடல் நலத்தோடு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் மறு நாள் எப்படி இத்தனை சீரியசாக முடியும். அப்படியே உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் அதை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும். தமிழக கவர்னர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி என பலரையும் பார்க்க விடாமல் தடுத்தது ஏன்? சாதாரண காய்ச்சல் என்று தானே சொன்னார்கள். பின்னர் பார்க்க முடியாத அளவுக்கு ரகசியம் காத்தது ஏன்? 75 நாட்கள் அடைத்து வைத்து இல்லாமல் செய்வதற்கு என்ன காரணம்?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், “ஐசியுவில் சேர்த்திருந்தாலும் கண்ணாடி வழியாக பார்க்க முடியுமே… அதையும் தடுத்தது ஏன்? நான் பல முறை ஆஸ்பத்திரி போனேன். அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு வந்தேன். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தியேட்டரில் தேசிய கீதம் பாட வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம் முதல்வர் ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை தரவேண்டும்” என கோரிக்கையும் விடுத்துள்ளார்.