’36 வயதினிலே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘மகளிர் மட்டும்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. குற்றம் கடிதல் பிரம்மா தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.. ஜோதிகாவுடன் பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகளும் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள வாகமன் என்கிற இடத்தில் நடைபெற்றது.. அப்போது அதே பகுதியில் சற்று தள்ளி மம்முட்டி நடித்துவரும் ‘தி கிரேட் பாதர்’ என்கிற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.. இந்த தகவல் ஜோதிகாவின் காதுக்கும் வந்து சேர்ந்தது..
இதுநாள்வரை மம்முட்டியுடன் இணைந்து நடித்திராத ஜோதிகா மம்முட்டியை சந்திக்கும் ஆவல் கொண்டார்.. கூடவே மம்முட்டியுடன் ஒரு காலத்தில் கதாநாயகிகளாக நடித்த பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா ஆகியோரும் சேர்ந்துகொள்ள, மம்முட்டி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று மம்முட்டியை சந்தித்து உரையாடிவிட்டு, அவருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளனர் இந்த ‘மகளிர் மட்டும்’ டீம்.