விழாவில் பங்கேற்ற பிரபுவும் மலையாள நடிகர் சங்கத்தலைவரான இன்னொசெண்ட்டும் சேர்ந்து மலையாள எவர்கிரீன் சூப்பர்ஸ்டார்களான மம்முட்டிக்கும் மோகன்லாலுக்கும் நினைவுப்பரிசை வழங்கி கௌரவித்தனர். பிரபு பேசும்போது, “நான் நடித்த பல வெற்றிப்படங்கள் மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டதுதான். அதுதான் என்னை இவ்வளவுதூரம் அழைத்து வந்திருக்கிறது” என்றார்.
மேலும் மம்முட்டியைப்பற்றி குறிப்பிடும்போது தனது மூத்த அண்ணன் என்றும் மோகன்லாலை தனது மாப்பிள்ளை என்றும் அன்புடன் குறிப்பிட்டார். மோகன்லாலின் மனைவியான சுசித்ரா மறைந்த நடிகரும் தயாரிப்பாளரும் சிவாஜியின் மிக நெருங்கிய நண்பருமான பாலாஜியின் மகள். பிரபுவின் சிறுவயது தோழியும்கூட. அதை மனதில்கொண்டுதான் மோகன்லாலை அவர் செல்லமாக ‘மாப்பிள்ளை’ என்று குறிப்பிட்டுள்ளார். மோகன்லாலும் பிரபுவும் இணைந்து காலாபாணி(சிறைச்சாலை) என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டும் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் மம்முட்டியுடன் சேர்ந்து இதுவரை பிரபு ஒரு படத்தில்கூட நடித்ததிலை.