மாதவனுக்கு என்ன ஆச்சு? ‘வேட்டை’ படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்சினிமா பக்கமே தலை காட்டாமல் அப்படி என்ன செய்கிறார் என யாரும் கொந்தளிக்கவேண்டாம். ‘வேட்டை’யாடிய மாதவன் இப்போது ‘இறுதிச்சுற்று’க்காக தயாராகி வருகிறார்.
அய்யோ.. அப்படி என்றால் மாதவன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விளையாட்டு வீரர் ஆகிவிட்டாரா என கலங்கவேண்டாம். இப்போது தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகவிருக்கும் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன். தமிழில் ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கே.பிரசாத் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் மாதவனுக்கு பாக்ஸர் கேரக்டர். அதனால் இதற்காக கடந்த பல மாதங்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்டனி, அலெக்ஸாண்டர் என இரண்டு வீரர்களிடம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்திருக்கிறார் மாதவன். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை-7ஆம் தேதி தொடங்கும் என தெரிகிறது. மான்கராத்தே’ மாதிரி அஸ்கு புஸ்கு பாக்ஸிங்காக இல்லாமல் ஒரிஜினல் குத்துச்சண்டை வீரர்களும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இப்போது சொல்லுங்கள் மாதவன் பதுங்கியிருப்பது பாய்வதற்குத்தானே.?
அத்துடன் ரஷ்யா, செர்பியா, மஸ்கோ என ஒரு டூர் அடித்துவிட்டு வந்திருக்கிறார். இதுபோக தோகா, கோலாலம்பூர், சிங்கப்பூர், குவைத் என இன்னும் ஒரு டூர் கிளம்ப இருக்கிறார் மாதவன். இதுபோக லாஸ் ஏஞல்ஸிலும் பல மாதங்கள் டேரா போட்டிருக்கிறார். காரணம் இல்லாமலா?