நமக்குப் பிடித்த ரோஜாவைத் தின்றது கருப்பு ஆடு..!

“மரணம் என்பது ஒரு கருப்பு ஆடு
பல சமயங்களில்
நமக்குப் பிடித்தமான ரோஜாக்களை
அது தின்று விடுகிறது”
– நா.முத்துக்குமார்.
மேலே சொன்ன நா.முத்துக்குமாரின் கவிதை வரியைப் போல இனம் புரியாத ஒரு வலியை மனதில் ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம். அவர் எழுதிய கவிதை வரிகளே அவரது விஷயத்தில் உண்மையாகி விட்டது மரணத்திற்கு வயது வித்தியாசம் இல்லையென்றாலும் மரணமடைய வேண்டிய வயதா அவருக்கு..?

தமிழ்த்திரையுலகில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோருக்குப்பின் மிகவும் புகழ்பெற்ற, ரசிகர்களுக்குப் பிடித்த பாடல்களை கொடுப்பதில் நா.முத்துக்குமாருக்கு இணை அவரே தான். அவரது இடம் சினிமாவில் இனி யாராலும் நிரப்பப்படமுடியாத ஒரு வெற்றிடமாகவே இருக்கும். நா.முத்துக்குமாரை ஈவு இரக்கமில்லாமல் இழுத்துச் சென்ற காலனை நாம் நிந்திக்கவும் முடியாது.

அதே சமயம் காலனை அருகில் நெருங்க விடாமல் அவர் கவனமாக இருந்திருக்கலாமே என்கிற எண்ணமே நாள் முழுவதும் மனதில் சுழன்றடிக்கிறது. இருப்பினும், நா.முத்துக்குமார் தனது பாடல்கள் மூலம் காலாகாலத்திற்கும் நம் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்திருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை

Na Muthukumarநா.முத்துக்குமார்