ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குநருக்கு வழங்கப்படுகின்ற, இந்திய சினிமா உலகில் கவுரவத்துக்குரிய விருதாகப் பார்க்கப்படுகின்ற கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, இந்த முறை ‘லென்ஸ்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது ‘லென்ஸ்’ படம். இந்தப் படம் பற்றி ஜெயப்பிரகாஷ் கூறும்பொழுது, “லென்ஸ் படம் பத்தி நான் இப்ப ரொம்ப பேசல. ஏன்னா இப்போதைய சமூகத்தில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை பேசும் படம் இது. கம்ப்யூட்டர், இன்டர்நெட், சோஷியல் மீடியாவால் ஆதிக்கம் செலுத்தப்படும் இன்றைய உலகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதையைச் சொல்லும் படம் இது” என்கிறார் .
“சமீபத்தில் கூட பேஸ்புக்கில் ஒரு பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து போட்டோ வெளியிட்டதால் அந்தப்பெண் இறந்தாக செய்தி வந்தது. இது போல நிறைய செய்திகள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மறந்து போய்விடுகிறோம். இந்தப் படம் அந்தமாதிரி செய்திகளை மறக்க வைக்காது. எப்பவுமே ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கும். நம்மை இன்னும் பொறுப்புள்ளவர்களாக்கும் என நினைக்கிறேன்” என்றும் உறுதிபட கூறுகிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ்.