அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வு இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. இந்நிலையில், அனிதா நினைவாக குழுமூரில் நூலகம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளும் கட்சியினர் உட்பட அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர். இந்தநிகழ்சியில் நடிகர் ராகவா லாரன்ஸும் கலந்துகொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அதேசமயம் அரசியல்வாதிகளுக்கு சுருக்கென படும் விதமாகவும் பேசினார். அவர் பேசியதாவது..
“நீட் தேர்வை எதிர்த்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவுக்கு, ஒரு அண்ணன் என்ற முறையில் ஒரு நூலகம் கட்டிக் கொடுக்க இங்கு வந்துள்ளேன். நம்மிடம் ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் நம் அறிவை வளர்க்க முடியாது. ஒரு நூலகம் இருந்தால், ஆயிரம் கோடி அளவுக்கு அறிவை வளர்க்கமுடியும். இந்த நூலகம் மாணவ, மாணவியருக்கு உதவியாக இருக்கும்.
மேலும், பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். மிக்ஸி, கிரைண்டர், ஆயிரம் ரூபாய் பணம் எனத் தேர்தலில் இலவசங்களை நம்பி யாரும் ஓட்டு போடாதீர்கள். தரமான கல்வி மற்றும் மருத்துவத்தை யார் இலவசமாகத் தருகிறார்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். நாம் யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை’ என்று பேசினார்.