போக்கிரி, வில்லு, யாரடி நீ மோகினி படங்களில் டைட்டில் கார்டையோ போஸ்டர்களையோ பார்த்தவர்களுக்கு எடிட்டிங் – கோலா பாஸ்கர் என்கிற பெயரே வித்தியாசமானதாக தென்பட்டிருக்கும். விறுவிறுப்பான படத்தொகுப்பிற்கு சொந்தக்காரரான கோலா பாஸ்கர் இப்போது ‘மாலை நேரத்து மயக்கம்’ படம் மூலம் ஒரு பரபரப்பான தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்..
இந்தப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் இயக்குகிறார் என்பது தெரிந்ததுதான். உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். தான் எடிட்டராக இருந்தாலும் தனது உதவியாளராக பணிபுரிந்த ரூபேஷை இதில் எடிட்டராக்கி இருக்கிறார் கோலா பாஸ்கர்.
இந்தப்படத்தின் வசனப்பகுதிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. இந்தப்படத்தில் அறிமுகமாகும் வாமிகா ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதமானது.
தற்போது அவரது கால்ஷீட் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே எடிட்டர் மோகன் பட தயாரிப்பில் இறங்கி வெற்றிபெற்றதுபோல, கோலா பாஸ்கரும் இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக ஜெயம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.