கீர்த்தி சுரேஷுக்கு பொங்கல் பண்டிகை எப்போதுமே ஸ்பெஷல் தான்.. காரணம் 2016 பொங்கலில் வெளியான ‘ரஜினி முருகன்’, 2017 பொங்கலில் வெளியான ‘பைரவா’ படத்தை தொடர்ந்து வருகிற பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியாகவுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் தான்.
ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிபில் விக்னேஷ் சிவன் டைரக்சனில் உருவாகியுள்ள இந்தப்படத்தில், அதிலும் சூர்யாவுடன் முதன்முறையாக நடித்துள்ளதில் இவருக்கு கூடுதல் சந்தோசம். இந்த நிலையில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
“தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹ்யூமர் கலந்த சஸ்பென்ஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும்போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது.
எனது பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது நான் சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது எனக்கு சொல்லிக்கொடுத்து உதவுவார்.
செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் கரடி பொம்மையைப்போல கியூட் ஆன மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தான் வசனத்தை கூறுவார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும்போது அது சிறப்பாக இருக்கும். அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது” என்றார் கீர்த்தி சுரேஷ்.