கடந்த வாரம் வெளியான ‘புலி’யுடன் சேர்த்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘கத்துக்குட்டி’. நரேன், சூரி நடிப்பில் ரா.சரவணன் இயக்கியிருந்த இந்தப்படம் தஞ்சை மாவட்ட விவசாயிகள் மீத்தேன் திட்டத்தால் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகளை பற்றி பேசுகிறது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் அக்-1ல் திரைக்கு வராமல் போனது. காரணம் தயாரிப்பாளர் ஒருவர் பண ரீதியாகத் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.
இந்நிலையில் ‘கத்துக்குட்டி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.ராம்குமார் நீதிமன்றத்தை அணுகி, நீதியரசர் ரவிச்சந்திர பாபு முன்னிலையில் 58 லட்ச ரூபாயை நீதிமன்றப் பதிவாளர் பெயரில் கட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வரும் அக்டோபர் 9-ம் தேதி தமிழகம் முழுக்க ரிலீஸாகிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.