சில தினங்களுக்கு முன் தனது வீட்டு மாடிப்படிகளில் இறங்கும்போது கமல் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட்டது. அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தேறியுள்ள கமல், விரைவில் குணமாகி வீடு திரும்புவேன் என ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் கூறியுள்ள ஒலிநாடாவில் இருந்து, “”என்பால் எப்போதும் எந்தநிலையிலும் அன்பு காட்டும் என் ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி பல. வெற்றிகளும், விபத்துகளும் எனக்கு விசித்திரமல்ல. சில இடர்களை கடந்து பல பாடம் கற்றவன். ஆனால் பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இவ்விபத்தே சான்று. ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில், இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான்.
எப்படி இருக்கீங்க? எப்ப பார்க்கலாம்? என்று கேள்விகளை கேட்டு துளைக்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் தம்பிக்கு, அண்ணனுக்கு, அப்பனுக்கு, தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம் பெற்று திரும்புவேன். எழுந்து அமர்ந்து இக்கடிதத்தை எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன்” என குறிப்பிட்டுள்ளார் கமல்.