இதுதான் சரியான நேரம் – மருதநாயகத்தை தூசி தட்டுகிறார் கமல்

கமலின் கனவுப்படம் தான் மருதநாயகம். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப் பற்றிய இந்த கதையை மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக எடுக்க நினைத்தார் கமல். தனது லட்சியக்கனவை நனவாக்கும் விதமாக 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியை சென்னைக்கு அழைத்துவந்து மிகப்பெரிய ஆரம்ப விழா ஒன்றையும் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார். ஆனால் அதன்பின் ஃபைனான்ஸ் உட்பட பல்வேறு காரணங்களால் இந்தப்படத்தை எடுக்கும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்தார் கமல்.

ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.

இப்போது இருக்கும் இந்த சூழ்நிலைதான் தூசிபடிந்து கிடக்கும் மருதநாயகம் படத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சரியான தருணம் என கமலின் நண்பர்கள் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கேற்ற மாதிரி வெளிநாட்டில் வசிக்கும் கமலின் நண்பர்களும் படத்திற்கு தேவைப்படும் தொகையைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று நட்புக்கரம் நீட்டியுள்ளதோடு இந்தப்படம் உங்களது உண்மையான ரசிகர்களுக்கு நீங்கள் தரும் பரிசாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதனால் விஸ்வரூபம்-2 வேலைகளை முடித்துவிட்டு கமல் மருதநாயகமாக மாறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கமல்
Comments (0)
Add Comment