களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்களம் என்பது தான் பொருள் என்கிறார் கிருஷ்ணா நடிக்கும் களரி படத்தை இயக்கிவரும் இயக்குநர் கிரண்சந்த். “ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்களம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த டைட்டில் இருக்கிறது’ என்று கூறும் இயக்குனர் கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம்.
நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் ‘களரி’ உருவாகியிருக்கிறதாம்.
கதாநாயகிகளாக வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி.வி.பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.