சுந்தர்.சி உட்பட பல இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க அழைத்தும் அதையெல்லாம் ஸ்ட்ரிக்ட்டாக மறுத்துவிட்ட ஜெயம் ராஜா ‘என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்ட்து ஏன்.? அதுவும் நான்கு குழந்தைகளுக்கு தந்தையாக..
அதற்கு காரணம் அந்த நான்கு குழந்தைகள் தான். அதுவும் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள். அவர்களுக்குத்தான் தந்தையாக நடித்திருக்கிறார் இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா. நேற்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதுகுறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஜெயம் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருடன் அந்த நான்கு க்யூட் குட்டீஸ்களும் கலந்துகொண்டனர்.
ராஜா பேசும்போது ‘எனக்கு டைரக்ஷன் மட்டுமே போதும் என்றுதான் நான் நடிக்கவராமல் ஒதுங்கி இருந்தேன். இந்தப்படத்தின் இயக்குனர் குரு ரமேஷ் சொன்ன இந்த கதை பிடித்திருந்தாலும் அதைவிட இந்த நான்கு குழந்தைகள் நடிக்கிறார்கள் என்று சொன்னதும் அவர்களது உலகத்தில் கொஞ்சநாள் வாழ்ந்து பார்க்கலாமே என்ற ஆசை ஏற்பட்டது. அதுதான் என் விரதத்தை கலைத்து என்னை இந்தப்படத்திற்குள் இழுத்து வந்தது” என்று தான் நடிக்க வந்த காரணத்தை விளக்கியதோடு அந்தக்குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் நெகிழ்ச்சியோடு பாராட்டித் தள்ளிவிட்டார்.
முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை குரு ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் நிதின்சத்யா முக்கிய கேரக்டரில் நடிக்க, மாளவிகா வேல்ஸ் என்பவர் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.. அதுமட்டுமல்ல அஜித்துடன் ‘காதல் மன்னன்’ படத்தில் ஜோடியாக நடித்த மானு 15 வருடங்களுக்குப்பின் மீண்டும் இந்தப்படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலையில் முடிகிற சம்பவங்கள்தான் படத்தின் கதை. உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் இதுவரை ஒரு படத்தில் இணைந்து நடித்ததில்லை. இந்த பெருமையை இந்தப்படம் பெற்றிருப்பதோடு, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.