சமீபத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான். உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இது போன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.
இயக்குனர் ராம் பேசுகையில், “இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். மாரிசெல்வராஜ் என்னிடம் வரும் போது, நான் அவனிடம் ஓடு… படி… எழுது… இது போதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ள படியே மகிழ்ச்சி”, என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்”, என்றார் மாரி செல்வராஜ்.