கிட்டதட்ட 75 வயதாகும் இளையராஜா, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கினார். வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தானே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தன்னால் முடிந்த உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்தார். இதே போன்று எக்மோர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களையும் நேரில் சென்று சந்தித்தார்.
கடலூருக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000 குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வழங்கியதுடன், அவர்களின் சோகத்தையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் பெப்சி தொழிலாளர்களின் குடும்பத்தினர்களுக்கு 5000 பெட்சீட்களை தனது சொந்த பணத்தில், நேரில் சென்று வழங்கினார். அவர்களுக்கு தேனையான அனைத்து உதவிகளையும் செய்தார்.
மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதங்கத்தில் இருந்தவரிடம், சூழல் தெரியாமல், இங்கிதம் இல்லாமல் பீப் சாங் பற்றி கேள்வி கேட்டதாலேயே அவருக்கு கோபம் வந்தது. அதனால் தான் அவர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நிருபரை பார்த்து அறிவிருக்கா என கேட்டார்.. இந்த தள்ளாத வயதில் அத்தனை உதவிகளை, பலனை எதிர்பாராமல் செய்த மனிதரை அற்ப காரணத்துக்காக விமர்சிப்பது நிச்சயமாக ஏற்புடையது ஆகாது. இதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.