“என்னுடைய முதலீடு நான் தான்” – கமல் ருசிகரம்

‘தங்கமீன்கள்’ படத்தை தொடர்ந்து ராம் இயக்கியுள்ள படம் ‘தரமணி’. இந்தப்படத்திற்காக ஆண்ட்ரியா ஆங்கிலத்தில் எழுதி இசையமைத்து பாடியுள்ள பாடல் ஒன்றின் வெளியீட்டு விழா இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக நேற்று இரவு நடைபெற்றது.

படத்தை பற்றியும் விழாவை பற்றியும் சில சுவராஸ்யமான ஹைலைட்ஸ்.

இந்த புரமோஷன் பாடலை வெளியிடுவதற்காக அழைக்கப்பட்டவர்கள் கமல், பாரதிராஜா என இரண்டே வி.ஐ.பிக்கள் தான். அதனால் விழா கொஞ்சம்கூட போரடிக்காமல் சுவராஸ்யமாக நடந்தது.

கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, புதுமுகம் வசந்த் ரவி என்பவர் இந்தப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். டாக்டரான இவர் பாரதிராஜாவின் நண்பர் மகன். இந்தப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ்குமார் தயாரிக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் என்றாலும், ஆண்ட்ரியா இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலை படத்தில் பயன்படுத்திக்கொள்ளும்படி பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டாராம் யுவன்.

விழா நிகழ்ச்சிகளை இயக்குனர் ராமே கவிநயத்துடன் சிறிதுகூட பிசிறில்லாமல் தொகுத்து வழங்கினார்.

பாரதிராஜா பேசும்போது “ஆங்கிலத்தில் பாடல் எழுதுவதும் அதை படங்களில் வைப்பதும் தப்பில்லை. நானே இருபது வருடத்திற்கு முன் இயக்கிய ‘நாடோடித்தென்றல்’ படத்தில் ஆங்கிலப் பாடல் ஒன்றை வைத்திருந்தேன். பிறமொழிகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாலும் தடுமாறாமல் தலைநிமிர்ந்து நிற்பதுதான் தமிழ்” என மாறிவரும் ட்ரெண்டிற்கு பச்சைக்கொடி காட்டினார்.

கமல் பேசும்போது, “நான் அடமானம் வைத்து படம் எடுத்தேன் என்று சொல்கிறார்கள். நான் வரும்போது வெறும் கையோடுதான் வந்தேன். என்னுடைய மூலதனம் நான் தான். சொல்லப்போனால் சினிமா எங்களுக்கு (பாரதிராஜைவையும் பார்த்து) சேரவேண்டியதை எப்போதோ கொடுத்துவிட்டது. இதோ இப்போது கிடைத்த கைதட்டல் மாதிரியான போனஸ்களில் தான் சினிமாவில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

படத்தில் நடித்த கனடாவை சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவன் மேடையில் பேசும்போது, “என் வயசு என்ன தெரியுமா?” என ஒரு புதிர் போட்டான். பிறகு அவனே, “எனக்கு 105 வயசு” என்று கூற மேடையில் அமர்ந்திருந்த கமலும் பாரதிராஜாவும் கூட அவனை ஆச்சர்யமாக பார்த்தார்கள். ஆனால் அதற்கடுத்து அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் மீண்டும் முதலில் கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டுவிட்டு அதற்கும் பதில் சொல்லாமல் விழித்தான். உடனே இயக்குனர் ராம், “பையன் சொல்லிக்கொடுத்த டயலாக்கை மறந்துட்டான் போல” என்று கூற கமல் அவனை அழைத்து தனது மடியில் உட்காரவைத்து, அவன் காதில் ஏதோ சொன்னார். அதற்கு அவன் அவரை பார்த்து ஒரு லுக் விட்டானே பாருங்கள். அரங்கமே அதிர்ந்தது கைதட்டாலால். பின் கமல் பேசும்போது “அவனிடம் மூன்றாவது ஒரு டேக் போகலாமா என கேட்டேன். அதற்குத்தான் என்னை அந்த பார்வை பார்த்தான். ஏய்யா என் மானத்தை வாங்குற அப்படிங்கிற மாதிரியான அவன் பார்வைக்கான அர்த்தம் நடிகர்களான எங்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று கூற அதற்கும் பலத்த கைதட்டல்.

இந்த பாடலை எழுதி இசையமைத்து பாடியுள்ள ஆண்ட்ரியா, “நான் எழுதிய பாட்டை நானே இசையமைத்துப் பாடுவேன் என்றும் அது என்னுடைய படத்திலேயே இடம்பெறும் என்றும் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்றவர் விழாவில் ஆப்சென்ட் ஆன படத்தின் இசையமைப்பாளர் யுவனுக்கும், இதை படமாக எடுத்து உற்சாகப்படுத்திய இயக்குனர் ராமிற்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

“குழந்தைகள் இல்லாமல் என்னால் படம் எடுக்கமுடியாது” என்று கூறிய ராம் “பாரதிராஜாவை இயக்குனர்கள் எல்லோரும் அப்பா என்று அழைப்பார்கள். ஆனால் எனக்கு ஒரு நல்ல அப்பா இருப்பதால் அவரை அண்ணன் என்றுதான் நான் அழைக்கிறேன்” என்று தனது தந்தைப்பாசத்தை வெளிப்படுத்தினார்.

KamalKamal Haasan
Comments (1)
Add Comment
  • auto verkopen

    129928 233267This internet site is my inhalation, genuinely wonderful layout and Perfect written content. 420672