வில்லன் நடிப்பு என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார் தான். வில்லனுக்கென்று ஒரு தனி இலக்கணத்தை உருவாக்கியவர். அவரது வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், கட்டுடல்வாகு, ஹீரோக்களுடன் போடும் சண்டைகள் எல்லாம் சேர்ந்து இவர் நிஜமாகவே மோசமான ஆளாக இருப்பாரோ என்று அந்தக் காலத்தில் ரசிகர்களை நினைக்க வைத்தன.
ஒவ்வொரு படங்களிலும் விதவிதமான வில்லத்தனங்களை அறிமுகப்படுத்திய பெருமையும் நம்பியாரையே சேரும். மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்ற நம்பியார் எம்.ஜி.ஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நம்பியார் ஐந்து தலைமுறை நடிகர்களுடன், கிட்டத்தட்ட ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 65ஆண்டுகள் சென்று வந்த பெருமைக்குரியவர் என்பதால் தமிழ் திரையுலகமே இவரை நம்பியார் சாமி என்றோ குருசாமி என்றோதான் அழைப்பார்கள். தனது கடைசி நிமிடம் வரை ஐயப்பனின் புகழை பாடும் ஒரு பக்தராகவே வாழ்ந்தார் நம்பியார். மக்களின் மத்தியில் நீங்காத இடம்பிடித்த நம்பியார் என்ற இந்த மாபெரும் கலைஞன் 2008ல் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்.
நம்பியார் பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை மனதில் கொஞ்சநேரம் அசைபோடுவதே அந்த கலைஞனுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.