இயக்குனர்கள் மணிவண்ணன், விக்ரமன், ரவிமரியா போன்றவர்களிடம் இருபது வருடங்களுக்கு மேல் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் சுப்புராஜ். இவர் தற்போது இயக்கிவரும் படம் தான் ‘என்ன பிடிச்சிருக்கா’. இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிகை அனுராதாவின் மகன் கெவின் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பிரீத்தி விஜ் அறிமுகமாகிறார்.
படத்தை தயாரிப்பதோடு கதாநாயகியின் தாத்தாவாக தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.. படத்திற்கு இசையமைப்பவர் ஸ்ரீவித்யா கலை. இவர் மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகிய இருவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, “உலகம் முழுக்க நம்ம கலாச்சாரத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க நாமோ அந்நிய கலாச்சாரத்தை பெருமையாக நினைக்கிறோம். ஆனால் அந்நிய தேசத்தில் இருந்து வரும் ஒரு தாத்தா பேத்தி. அதில் பேத்திக்கு நமது கலாச்சாரத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டு, சிலம்பாட்டம் போன்றவற்றில் வீரனாக திகழும் கெவின் மீது காதல் கொள்கிறாள்.
அந்த காதலுக்கு ஏற்படும் தடைகளும் அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதும்தான் கதை இந்த கதைக்கு புதுமுகங்களை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை அனுராதாவின் மகன் பற்றி கேள்விப்பட்டு வரவழைத்துப் பார்த்தோம் பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தோம்” என்று கூறினார்.