இளம் ஹீரோக்களின் படங்களே தடுமாறிக்கொண்டு இருக்கும் இன்றைய சூழலில், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் அவ்வப்போது சில தமிழ்ப்படங்களில் தலைகாட்டும் நடிகர் ரகுமானை கதையின் நாயகனாக வைத்து ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கியிருக்கிறார் இளம் வயது அறிமுக இயக்குனரான கார்த்திகே நரேன்..
எந்த தைரியத்தில் இப்படி முடிவெடுத்தார் இயக்குனர் என்றால் படத்தின் கதையும் அதற்கு ரகுமான் தான் பொருத்தமான ஆளாக இருப்பார் என்கிற எண்ணமும் தான் காரணமாம். ரகுமான் போலீஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார்.. இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் படம் பார்க்கவரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அதேசமயம் அறிவுக்கு வேலை கொடுக்கும் விதமாகவும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர்..
அதாவது வரும் 29ஆம் தேதி வெளியாகும் இந்தப்படத்தை பார்த்துவிட்டு இதன் கதை என்ன என்பதை எழுதி அனுப்பினால் மூன்று லட்ச ரூபாய் பரிசாக கிடைக்குமாம்.. இதென்ன ஜுஜுபி மேட்டர்..? படத்தை பார்த்துவிட்டு கதை எழுதுவதா கஷ்டம் என்கிறீர்களா..? வித்தியாசமான திரைக்கதையாலும் அவ்வப்போது முன்னே பின்னே போய்வரும் பிளாஸ்பேக் உத்திகளாலும் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப்படத்தை பார்த்த திரையுலக வி.ஐ.பிகள் படத்தை பற்றில் சிலாகித்து கூறிவருகிறார்கள்.
அதனால் இதன் கதையை தெளிவாக கணித்து சரியான ஆர்டரில் எழுதி அனுப்புவர்களுக்கு பரிசு நிச்சயம்.