விஜய்யை வைத்து ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ என மூன்று படங்களை இயக்கியவர் கே.செல்வபாரதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சியை வைத்து ‘முரட்டுக்காளை’ படத்தை ரீமேக் செய்து இயக்கியவர் இப்போது ‘காதலைத்தவிர வேறொன்றும் இல்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
‘கீரிப்புள்ள, ‘சாட்டை’ படங்களில் நடித்த யுவன் கதாநாயகனாகவும் சரண்யா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். காதலை வெறுக்கும் யுவனையும் காதலை நேசிக்கும் சரண்யா மோகனையும் அந்த காதல் என்ன செய்கிறது என்பது தான் படத்தின் கதை.
டியூசன் மாஸ்டராக இமான் அண்ணாச்சி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தவிர இந்தப்படத்தில் ஏகப்பட்ட சிறுவர் பட்டாளமும் நடித்திருக்கிறது. அதில் செல்வபாரதியின் மகன்கள் இருவரும் கூட நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தைப்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய இயக்குனர் செல்வபாரதி “டைட்டில்தான் காதலைப்பற்றி இருக்கிறதே தவிர இந்தப்படம் குழந்தைகளின் கல்வியைப் பற்றிய படம். கல்வி என்ற பெயரால் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களை மூட்டை மூட்டையாய் புத்தகப்பையை தூக்கச்செய்து வாட்டி வதைப்பவர்களுக்கு இந்தப்படம் ஒரு சாட்டையடியாய் இருக்கும்” என்றார் கோபமாக.