“கொம்புள்ள மாடு இடம் தெரியாமல் முட்டி இருக்கிறது” ; உதயநிதியை பாராட்டிய சீனுராமசாமி

சில இயக்குனர்கள் படத்தில் நடித்தால் சில நடிகர்களுக்குள் புதைந்து கிடக்கும் நடிப்புத்திறமை தன்னாலே வெளிவரும் அதிசயம் நிகழ்ந்ததை இயக்குனர் பாலா, அமீர் போன்ற சில இயக்குனர்கள் சாதித்துக் காட்டினார்கள் அந்த வரிசையில் சீனு ராமசாமியும் நடிகர்களுக்குள் ஒளிந்துள்ள அற்புதமான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர்.

தர்மதுரையில் விஜய்சேதுபதியை முற்றிலும் மாறான ஒரு நடிகராக காட்டியவர், தற்போது கண்ணே கலைமானே படத்தின் மூலம் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத உதயநிதியை வெளிக்கொண்டு வந்து உள்ளாராம்.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சீனுராமசாமி, உதயநிதி நல்ல கொம்பு உள்ள மாடு தான்.. ஆனால் இதுநாள்வரை சுவற்றில் போய் முட்டிக்கொண்டு இருந்திருக்கிறது.. இனி அதற்கு வேலை இல்லை.. கண்ணே கலைமானே அவரது பயணத்தையே மாற்றிவிட்டது.. மிகவும் எதார்த்தமான நடிப்பு உதயநிதியிடம் இருக்கிறது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என சிலாகித்துக் கூறியுள்ளார் சீனுராமசாமி.

தமன்னா பற்றி குறிப்பிடும்போது, “அவர் ஒரு ஆன்மா.. நான் சொன்ன கதாபாத்திரத்தை உள்வாங்கி கிளிசரின் போடாமலேயே நடிக்கக்கூடியவர் என்றால் அவரை நான் வேறு எப்படி சொல்வது..? இன்னும் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் தமன்னாவின் நடிப்பை வெளிக்கொண்டுவர விரும்புகிறேன்” என்றும் சீனுராமசாமி குறிப்பிட்டுள்ளார்

பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இனி வரும் படங்களில் எல்லாமே யுவன்சங்கர் ராஜாவுடன் தான், சேர்ந்து பயணிக்க போகிறேன் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார் இயக்குனர் சீனுராமசாமி. நீண்ட நாளைக்கு பிறகு நடிகை வடிவுக்கரசி மிக முக்கியமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Director Seenu RamasamyKanne KalaimanaeTamannaahUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்கண்ணே கலைமானேசீனு ராமசாமிதமன்னா