நயன்தராவுக்காக காத்திருக்கும் பாண்டிராஜ்..!


இந்த இருபது வருட காலகட்டத்தில் கிறிஸ்துமஸுக்கு ஒன்று, பொங்கலுக்கு ஒன்று என குறுகிய கால இடைவெளியில் தான் இயக்கிய இரண்டு படங்களை ரிலீஸ் செய்த இயக்குனர் பாண்டிராஜ் ஒருவராகத்தான் இருப்பார். ஏற்கனவே ‘பசங்க-2’ விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொங்கலுக்கு வெளியான ‘கதகளி’ மூலம் பாண்டிராஜின் புதிய முயற்சிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்து அவரது இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் படம் சிம்பு-நயன்தாரா காம்பினேஷனில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படம் தான்.. பாண்டிராஜின் முந்தைய இரண்டு படங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட தயாராகிவிட்ட ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளன.

பாடலுக்காக நயன்தாரா கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டதால், அவர் மீண்டும் இதில் நடிக்க வருவாரா என்பது சந்தேகம் தான்.. ஆனால் இரண்டு பாடல்களை எடுத்து தான் ரிலீஸ் பண்ணவேண்டும் என பிடிவாதம் காட்டுகிறாராம் சிம்பு. இதுபற்றி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பாண்டிராஜிடம் கேட்டபோது, “பாடல்கள் என்றாலே ரசிகர்கள் வெளியே எழுந்துபோகும் சூழல் தான் இப்போது இருக்கிறது.. இருந்தாலும் நயன்தாராவிடம் தேதி கேட்டுள்ளோம்.. அவர் வருவார் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார் பாண்டிராஜ்.

Ithu Namma AaluKathakaliNayantharaPandirajPasanga-2Simbu