இயக்குனர் கஸ்தூரி ராஜாவை பற்றி அறிமுகம் கொடுக்க தேவையில்லை தான். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ஆர்.கே.புரொடக்ஷன் தயாரிக்கும் ‘பாண்டி முனி’ படத்தின் மூலம் டைரக்சன் தொப்பியை அணிந்திருக்கிறார். இது இவர் இயக்கும் 23 வது படம்
இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட்
படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..”இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது.
சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.