தனது கனவுப்படமான ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கு சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டியில் வைத்து பூஜை போட்டு அதை உலகுக்கு அறிவிப்பு செய்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இயக்குனர் பாலாவும் இதே கதையை படமாக எடுக்கிறார் என கிளம்பிய தகவல் தான் இந்த அவசர பூஜைக்கு காரணம். ஆனால் அதில் உண்மையில்லை என பாலா தரப்பில் இருந்து பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் மூலம் விளக்கமும் அளிக்கப்பட்டதாம்..
ஆனால் இன்று வெளியான ஒரு பேட்டியில் “என் எச்சிலை பாலா தின்னமாட்டான் என நம்புகிறேன்” என பாரதிராஜா கூறியிருந்ததுதான் பாலாவை சூடாக்கிவிட்டது.. இவ்வளவு தூரம் விளக்கம் சொல்லியும் மீண்டும் நம்மை தேவையில்லாமல் பாரதிராஜா வம்புக்கிழுப்பதாள், இதற்கு விளக்கமும் பதிலடியும் தருவதற்காக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, நடந்தது என்ன என்பதை காட்டமாக பகிர்ந்துகொண்டார் பாலா.
இந்த சந்திப்பில் பாரதிராஜா இயக்க இருக்கும் குற்றப்பரம்பரை கதைக்கும், தான் இயக்க இருப்பதாக சொல்லப்படும் கதைக்கும் எந்த தொடர்பு இல்லை.என்றும் சொல்லப்போனால் வேலா ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை’ என்னும் நூலில் உள்ள கதைக்களத்தை மட்டுமே எடுத்து அதில் கொஞ்சம் கற்பனை சேர்த்து படமாக்க இருப்பதாக பாலா குறிப்பிட்டார்.. அதுமட்டுமல்ல தனது படத்தின் டைட்டிலும் குற்றப்பரம்பரை அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
இருதரப்பிலும் நடந்தது என்ன என்கிற உண்மையை பாலாவுடன் வந்திருந்த தயாரிப்பாளர் தனஞ்செயனும் விளக்கி கூறினார். இறுதியாக பேசிய பாலா, இனி இந்தப்படம் குறித்த விவகாரத்தில் பாரதிராஜாவோ அல்லது அவருடன் இருக்கும் ரத்தினக்குமாரோ தனது பெயரை இழுக்க கூடாது என எச்சரிக்கை விடுப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார்..
ஆக, இத்துடன் இந்தப்பிரச்சனைக்கு முடிவுக்கு வரட்டும்.. வரும் என நம்புவோம்.