ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து பாடலை படமாக்கி இயக்குனர் பத்ரி புதுமை..!

‘தில்லுமுல்லு’ ரீமேக்கிற்கு பிறகு பத்ரி இயக்கியுள்ள படம் தான் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. ‘சூது கவ்வும்’, ‘யாமிருக்க பயமே’ படங்களின் மூலம் நகைச்சுவையில் பின்னி பெடலெடுக்கும் கருணாகரன் தான் இந்தப்படத்தின் ஹீரோ.. ‘ஜிகர்தண்டா’வில் ரவுடி சேதுவாக நம்மை அலறவைத்த பாபி சிம்ஹா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக விஜயலட்சுமி, ஹர்ஷிதா ஆகியோர் நடிக்கிறார்கள். இது தவிர இன்னொரு போலீஸ் அதிகாரியாக கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ஆடுகளம் நரேன், சேத்தன், மிர்ச்சி பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதன்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் பத்ரி..

“கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை காமெடி கலந்து எடுத்துள்ளேன்.. இந்தப்படத்தில் இடைவேளைக்கு கொஞ்சம் முன்னதாக ஒரு காமெடியான சேசிங் சீன் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதை ஒரு பாடல் காட்சியுடன் சேர்ந்து படமாக்கவேண்டும் என நினைத்தேன். அதனால் டான்ஸ் மாஸ்டருக்கு பதிலாக ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து இந்த பாடலை படமாக்கியுள்ளேன்..” என்று கூறினார் பத்ரி.