பொதுவாக காவிரி பிரச்சனை தீவிரமாகும்போதேல்லாம் இரண்டு மாநில நடிகர்களுக்கும் அபாயகரமான, விரும்பத்தகாத சூழல் உருவாகி விடுகிறது. நம் தமிழ் திரையுலகத்தினர் அடக்கி வாசித்தாலும் கூட, கர்நாடக திரையுலகத்தினர், குறிப்பாக கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து நடிப்பவர்கள், நடித்து புகழடைந்தவர்கள் கூட தமிழ்நாட்டுக்கு எதிராக கோஷம் போடும் தங்களது கேவலமான புத்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்..
ஆனால் நம் தமிழ் திரையுலகமோ, கலைஞர்கள் என்பவர்கள் பொதுவானவர்கள், அவர்கள் இதுபோன்ற சர்ச்சையில் ஈடுபடக்கூடாது என்கிற ரீதியில் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்கிறது.. ஆனால் நம் சமூக விமர்சகர்களோ, இந்த விவகாரத்தில் சினிமாக்காரர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என நம்மவர்கள் மீதே விமர்சன கல்லெறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.
நேற்று நடைபெற்ற ‘கடிகார மனிதர்கள்’ இசை வெளியீட்டு விழாவிலும் இது குறித்த பேச்சு இடம்பெற்றது.. காரணம் படத்தின் ஹீரோ கிஷோர் கன்னடத்தை சேர்ந்தவர்.. தயாரிப்பாளர் மலையாளி.. இயக்குனரோ தமிழர்.. இப்படி மும்மொழிகளும் சங்கமித்த விழாவில் பேசிய பாக்யராஜ், “காவிரி பிரச்சனையை பொறுத்தவரை நடிகர்கள் பேசினாலும் குத்தம்.. பேசாவிட்டாலும் குத்தம் என்கிற நிலைதான் இருக்கிறது.. கர்நாடகாவில் நடிகர்கள் நமக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே.. நீங்கள் ஏன் பதிலுக்கு தெரிவிக்கவில்லை என நம் மீதே அம்பை திருப்புகிறார்கள்” என வருத்தப்பட்டு பேசினார்.