’டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டில் ‘டிமான்ட்டி காலனி’யின் முதல் பாகம் வெளியானது. வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்ததால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வெற்றி பெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பூர்த்தியாகி இருப்பதால் தற்போது இறுதி கட்டப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். ‘டிமான்ட்டி காலனி 2’ படத்திற்கான வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ‘டிமான்ட்டி காலனி 2’ படத்திற்கான அறிமுக போஸ்டர் க்யூ ஆர் கோடு முறையில் வெளியிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்தது என்பதும் , விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் வித்தியாசமான முறையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor ArulnidhiArulnidhiDemonteColony2