சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவை படங்கள் தான் என கிட்டத்தட்ட ரசிகர்களிடையே முத்திரையே குத்தியாகிவிட்டது. அந்த பிம்பத்தை இப்போது அவரே உடைக்க முயற்சித்திருக்கிறார் தான் இயக்கியுள்ள ‘அரண்மனை’ படம் மூலமாக.
காமெடி சப்ஜெக்ட்டுகளை வைத்து வரிசையாக ஹிட் படங்களாகத்தானே கொடுத்து வந்தார். அப்படியானால் திடீரென ஹாரர் படங்களுக்கு மாறவேண்டிய அவசியம் என்ன வந்தது? இதற்கு அவரே நேற்று நடைபெற்ற ‘அரண்மனை’ பட இசைவெளியீட்டு விழாவில் பதில் அளித்தார்.
“கிட்டத்தட்ட இந்த பத்து வருடத்தில் ‘சந்திரமுகி’, ‘அருந்ததி’, ‘காஞ்சனா’ என மூன்று ஹாரர் படங்கள் மட்டுமே தமிழில் சொல்லிக்கொள்ளும்படியாக ரிலீசாகி இருக்கின்றன. அதுவும் மூன்று வருடங்களுக்கு ஒரு படம் தான்.. அதனால் ஏன் நாம் ஒரு ஹாரர் படம் எடுக்கக்கூடாது என்று நினைத்தேன்..
இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. நான் எப்போதடா வீட்டிற்கு வருவேன் என என் குழந்தைகளும் மனைவியும் காத்திருந்து, எனக்காக ஒரு பேய்ப்படத்தை போட்டுக்காட்ட தயாராக வைத்திருப்பார்கள். அதை என்னுடன் சேர்ந்து பார்த்து பயப்படுவதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம்
அதனால் ஹாரர் படங்களை பார்ப்பதில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆர்வம் இருப்பது ஓரளவுக்கு எனக்கு புரிந்தது. இது நான் தொடாத ஏரியாதான் என்றாலும் அதிலும் சிறப்பாகவே என் பங்கை செய்திருக்கிறேன்” என ‘அரண்மனை’ படம் உருவான காரணத்தை கூறினார் சுநதர்.சி
இந்தப்படத்தில் சுந்தர்.சி, வினய் கதாநாயகர்களாக நடிக்க ஹன்சிகா, ராய்லட்சுமி, ஆண்ட்ரியா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். திகில் படமாக இருந்தாலும் சந்தானம், சாமிநாதன், கோவை சரளா என பலமான காமெடி காம்பினேஷனும் இருக்கிறது. வரும் செப்டம்பர்-19ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்..