சென்னைக்குள் நுழையுமுன் ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள்.. இப்போது அதையே ஒரு படத்திற்கு தலைப்பாக மாற்றியும் விட்டார்கள். பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தை மருதுபாண்டியன் என்பவர் இயக்க, மதுராஜ் என்பவர் தயாரித்திருக்கிறார்.
அடிப்படையில் இந்த மதுராஜ், இயக்குனர் பாக்யராஜின் சீடர்.. அதனால் இந்தப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி தரணீதரன், ‘கற்றது தமிழ்’ ராம் உட்பட பல இயக்குனர் கலை அழைத்து திரையிட்டு காட்டினாராம்.
அனைவரும் பாராட்டினாலும் இந்தப்படத்தை மூன்று முறை பார்த்த பாரதிராஜா, “நான் எனது சின்ன வயதில் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்து தங்கியிருந்தபோது சந்தித்த பல நிகழ்வுகளை இந்தப்படத்தின் பாபி சிம்ஹா கேரக்டர் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டது” என்று கூற, அவரது சிஷ்யர் பாக்யராஜோ, இந்தப்படத்தை புதியவர் தான் இயக்கியுள்ளார் என்று சொன்னால் என்னால் நம்பமுடியவில்லை” என்று கூறினாராம்.
சென்னைக்கு வேலை தேடி வரும் மூன்று பேச்சிலர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையிலும் விளையாட்டாக போய் சொன்னால், பின்னர் தேவையான இடத்தில் உண்மை சொன்னாலும் அது பொய்யாகத்தான் போய்விடும் என்கிற ஒரு கருத்தையும் நாசூக்காக திணித்திருக்கிறார்களாம். இந்தப்படத்தின் இசைவெளியீடு வரும் ஜன-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.